வேரும் தளிரும் என்ற பெயரில் ஒரு சஞ்சிகை -இருபக்க முயற்சியாக- மூன்று வருடங்களுக்கு முன் துவக்கப்பட்டது.
இதற்கான வித்து, சில புலம் பெயர்ந்த மென்பொருள் வல்லுனர்களின் தமிழ் ஆர்வமும், நம் வேர்களை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்ற கவலையுமே என்று சொன்னால் மிகையாகாது.
குறிப்பாக பெங்களூர், ஹைதிராபாத், புனே போன்ற வெளி மாநிலங்களில் புலம் பெயரும் போது தமிழுடனான தொடர்பு சிறிது சிறிதாக சுருங்கி வெறும் பேச்சு வழக்கு என்ற அளவில் நின்று விடுவதையும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழின் அவசியமோ பெருமையோ புரியாமலே போய் விடுகின்ற நிலைமையும் கவலை தருகின்ற விஷயம் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
பெரும்பாலானோர் தொழில் யுகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பதாலும், ஊடகங்களில் கவர்ச்சியும் வணிகத்தன்மையுமே காணப்படுவதால் இந்த பாதையில் மனதிற்கு சற்று ஊட்டமிக்க இளைப்பாறுதல் தருதல் அவசியம் என்று உணர்ந்தனர்.
அதே நேரத்தில் இணையத்தில் பலர் மிக அற்புதமான கருத்துகளை எழுதி வருவதையும் ஆனால் அவை எண்ணிக்கையில் மிக அதிகமாகவும் அங்கங்கே சிதறிக் கிடப்பதாலும் அவற்றை ஒருங்கிணைத்து தனி மின்னஞ்சலிலோ வாட்ஸ்-ஆப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பயனளிக்கும் என்று கருதப்பட்டது.
அதில் கவனத்தில் கொள்ள வேண்டியவனாக கீழ் கண்டவற்றை சொல்லலாம்.
1) முக்கியமாக நடப்பு அரசியல் தவிர்க்கப்பட வேண்டும். எதிர்மறை எண்ணங்களை ஊக்குவிப்பதாக இருக்கக்கூடாது.
2) தமிழர் மற்றும் பாரத பண்பாட்டை உணர்த்தக் கூடிய அறிவியல் , இலக்கிய ஆன்மீக, தொழில்நுட்பக் கருத்துகள் எப்படி நம்முடைய வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது என்பதை எடுத்துக் காட்ட வேண்டும்.
3) வீரம், தியாகம், பரோபகாரம், கடமை உணர்வு, அரச நீதி, ராஜவிசுவாசம் போன்றவற்றை நினைவுபடுத்தும் நிகழ்ச்சிகள் தொகுக்கப்படவேண்டும்.
4) தமிழ் நாட்டைப்பற்றி சுவாரசியமான தகவல் -அதிகம் அறியப்படாதவை - சில பகுதிகளுக்கே உரித்த பாரம்பரிய பழக்கவழக்கங்கள் அவற்றின் பின்னணியுடன் தருதல் வேண்டும்.
5) இரண்டே பக்கங்கள் கொண்டதாக - இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் படிக்கக் கூடியதாகவும் - அதை அச்சு எடுத்து குடும்ப உறுப்பினர்களோடு பகிர்ந்து கொள்ள ஏதுவாகவும் இருக்க வேண்டும்.
இதுவரை முப்பத்தியாறு இதழ்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. அவை தனிப்பட்ட குழுமங்களிலேயே பகிர்ந்து கொள்ளப்பட்டது.
பல புதிய வாசகர்கள் பழைய இதழ்களை விசாரிப்பது அதிகமாகியபோது இதை பொது வெளியில் தரவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கலாம் என்ற எண்ணத்துடன் இந்த வலைப்பூ "வேரும் தளிரும் " என்ற அதே பெயருடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வலைப்பூவின் நோக்கம் தரவிறக்கத்திற்கான இணைப்புகளும், வாசகர்களுக்கு புதிய இதழ் வெளியானவுடன் மின்னஞ்சல் மூலம் அறிவிப்பும் தருவதாகும்.
மின்னஞ்சல் மூலம் பெற விரும்பும் வாசகர்கள் தங்கள் அஞ்சல் விவரத்தை பதிவு செய்து கொள்ளலாம். மறக்காமல் அதை "Confirm" செய்யவும்.
மேலே உள்ள படத்தை சொடுக்கினால் விளம்பி வருடத்தின் இதழ்களுக்கான தரவிறக்கத்திற்கான பக்கத்திற்கு செல்லலாம்.
இதன் முன்னேற்றத்திற்கான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
வாழ்க வளர்க.

No comments:
Post a Comment